ஊரடங்கால் சிக்கி தவிப்பு: குவைத்தில் இருந்து 171 பேருடன் சிறப்பு விமானம் சென்னை வந்தது

ஊரடங்கால் குவைத்தில் சிக்கி தவித்த 171 பேருடன் சிறப்பு விமானம் சென்னை வந்தடைந்தது.
ஊரடங்கால் சிக்கி தவிப்பு: குவைத்தில் இருந்து 171 பேருடன் சிறப்பு விமானம் சென்னை வந்தது
Published on

ஆலந்தூர்,

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விமான சேவை முற்றிலும் தடை செய்யப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் தமிழகத்தில் சிக்கித்தவித்த அமெரிக்கா, ஆஸ்திரேலியா, துபாய், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, வங்காளதேசம், பிரான்ஸ் உள்பட பல நாடுகளை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் அதிகமான வெளிநாட்டு பயணிகள் சிறப்பு விமானங்கள் மூலம் அவர்களது நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

அதேபோல் ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை சொந்த நாட்டுக்கு அழைத்து வர மத்திய அரசு வந்தே பாரத் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியர்களை அழைத்து வர 60-க்கும் மேற்பட்ட சிறப்பு விமானங்களை இயக்கப்படுகிறது.

அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு துபாயில் இருந்து சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்துக்கு 2 சிறப்பு விமானங்களில் 359 பேர் அழைத்து வரப்பட்டனர். அனைவரும் தனியார் கல்லூரி மற்றும் தனியார் ஓட்டல்களில் 14 நாள் கண்காணிப்பில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் குவைத்தில் இருந்து 4 குழந்தைகள், 60 பெண்கள் உள்பட 171 பேருடன் சிறப்பு விமானம் நேற்று முன்தினம் இரவு சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்துக்கு வந்தடைந்தது. இவர்களை குடியுரிமை மற்றும் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.

பின்னர் விமான நிலையத்திலேயே தமிழக பொது சுகாதார துறை சார்பில் கொரோனா பரிசோதனைக்காக சளி மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

பின்னர் குவைத்தில் இருந்து வந்தவர்களின் விருப்பங்களின் பேரில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் மூலமாக 167 பேர் சென்னை மற்றும் புறநகரில் உள்ள தனியார் கல்லூரி மற்றும் ஓட்டல்களில் தனிமைப்படுத்த அழைத்துச் செல்லப்பட்டனர். மீதி 4 பேர் மருத்துவ உதவிக்காக ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனையில் யாருக்காவது உறுதி செய்யப்பட்டால் அவர்களை ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படும். தொற்று இல்லாதவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைத்து பின்னர் வீட்டுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக சிறப்பு விமானத்தில் வந்தவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் உணவு பொட்டலங்களை அதிகாரிகள் வழங்கினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com