விவசாயிக்கு கத்தி வெட்டு; வாலிபர் கைது

கச்சிராயப்பாளையம் அருகே விவசாயியை கத்தியால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விவசாயிக்கு கத்தி வெட்டு; வாலிபர் கைது
Published on

கச்சிராயப்பாளையம்,

கச்சிராயப்பாளையம் அருகே உள்ள மாதவச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் செந்தில்(வயது 27). இவர் நேற்று காலையில் கச்சிராயப்பாளையம் புதிய பஸ் நிலையம் பகுதியில் கையில் சோடா பாட்டிலுடன் தான் ரவுடி என கூறியபடி சுற்றிக்கொண்டிருந்தார்.

அப்போது வெங்கடாம்பேட்டை காட்டுகொட்டாயை சேர்ந்த விவசாயி கந்தன்(55) என்பவர் அங்கு வந்து, அவரிடம் தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரமடைந்த செந்தில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கந்தனின் கையில் வெட்டினார். இதில் காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையே இதுபற்றி அறிந்த கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் தலைமையிலான போலீசார் பஸ் நிலையத்துக்கு வந்து, கையில் சோடா பாட்டிலுடன் சுற்றித்திரிந்த செந்திலை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், கடந்த ஜூன் மாதம் மாதவச்சேரி கிராமத்தை சேர்ந்த அழகப்பன், பாவாயி ஆகியோரை கத்தியால் வெட்டிய வழக்கில் செந்தில் தேடப்பட்டு வந்தவர் என்பது தெரியவந்தது. இதுகுறித்து கந்தன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்திலை கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com