கன்னியாகுமரியில் சூறைக்காற்று: விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து

கன்னியாகுமரி கடலில் நேற்று சூறைக்காற்று வீசியதால் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. மேலும், மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
கன்னியாகுமரியில் சூறைக்காற்று: விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து
Published on

கன்னியாகுமரி,

உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இவர்கள் கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்வையிடுவார்கள். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

நேற்று காலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கடற்கரையில் குவிந்தனர். அவர்கள் சூரிய உதயத்தை கண்டு களித்த பின்பு விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்வதற்காக படகு துறைக்கு சென்றனர். காலை 8 மணிக்கு வழக்கம் போல் படகு போக்குவரத்து தொடங்கியது.

படகு போக்குவரத்து ரத்து

காலை 9.30 மணியளவில் கடலில் பயங்கர சூறைக்காற்று வீசியது. ராட்சத அலைகள் எழுந்து கரையை நோக்கி பாய்ந்து வந்தன. இதையடுத்து விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. மேலும், ஏற்கனவே அழைத்து செல்லப்பட்டிருந்த பயணிகளை அவசரம், அவசரமாக கரைக்கு அழைத்து வந்தனர். படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் அங்கு காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். மேலும், கடற்கரை பகுதியில் போலீசார் ரோந்து சென்று யாரும் கடலில் இறங்காதவாறு கண்காணித்தனர்.

மீன்பிடிக்க செல்லவில்லை

நேற்று காலையில் சூறைக்காற்று வீசியதால் கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதுபோல், சின்னமுட்டம், ஆரோக்கியபுரம், கோவளம், கீழமணக்குடி, மேல மணக்குடி போன்ற மீனவ கிராமங்களை சேர்ந்த விசைப்படகு மற்றும் கட்டுமர மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. அவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com