தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி பொதுமக்கள் குறைகள் பகுதி
தினத்தந்தி புகார் பெட்டி
Published on

வளைந்த மின் கம்பம்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பாட்டிக்குளம் அருகே செங்குந்தர் ஒத்தவாடை தெரு பகுதியில் இருந்த ஒரு மின்கம்பத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரும்பு லாரி மோதியதால் வளைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. வளைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும்.

-சத்தியமூர்த்தி, சோளிங்கர்.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பயன்பாட்டுக்கு வருமா?

வேலூர் மாநகராட்சியில் முதல் வார்டான கல்புதூர் ராஜீவ்காந்தி நகரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மாநகராட்சி குடிநீர் அபிருத்தித் திட்டத்தின் கீழ் 12 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டப்பட்டுள்ளது. பல மாதங்களுக்கு முன்பு தமிழக முதல்-அமைச்சரால் காணாலி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது. ஆனால் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வராமல் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவார்களா?

-பி.துரை, கல்புதூர்.

சேதம் அடைந்த கல் மண்டபம்

திருவண்ணாமலையில் மிகப் பழமை வாய்ந்த கல் மண்டபம் ஒன்று உள்ளது. அந்த மண்டபம், இந்து சமய அறநிலையத்துறைக்கு சம்பந்தப்பட்டதாகும். அந்த மண்டபம் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. அங்கு சமூக விரோத செயல்களும் நடக்கின்றன. கல் மண்டபத்தை சீரமைத்து பக்தர்களின் வசதிக்காக விட வேண்டும்.

-குமார், திருவண்ணாமலை.

மேம்பாலம், சாலை அமைப்பார்களா?

வேலூரில் நாளுக்குநாள் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. கிரீன் சர்க்கிளை கடப்பதற்குள் என்னவெல்லாம் நடக்கலாம் என்ற நிலை உள்ளது. இதனால் காட்பாடி ரெயில் நிலையத்துக்கு செல்ல முடியாமல் ரெயிலை தவற விட்டவர்கள், மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வர முடியாமல் பாதிக்கப்பட்டவர்கள் பலர் உள்ளனர். கிரீன் சர்க்கிளில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சத்துவாச்சாரி-காங்கேயநல்லூர் இடையே பாலாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட வேண்டும். பாலமதி-செங்கானத்தம் இடையே காப்புக்காடு சாலை அமைத்தால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து வேலூர் வரும் வாகனங்கள், ஆம்புலன்ஸ், இலகுரக, கனரக வாகனங்கள் மேலகுப்பம், செங்கானத்தம், பாலமதி, குளவிமேடு வழியாக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு செல்லலாம். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-லயன். ர.குப்புராஜ், வேலூர்.

வீணாக வெளியேறும் குடிநீர்

ராணிப்பேட்டையை அடுத்த வாணாபாடி சாலையில் உள்ள தந்தை பெரியார் நகரில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வினியோகம் செய்யும்போதெல்லாம் குடிநீர் வீணாக வெளியேறி சாலையில் ஓடுகிறது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து குழாய் உடைப்ப சரி செய்ய வேண்டும்.

-ஆர்.செல்வராஜ், ராணிப்பேட்டை.

சாலையோரம் குவியும் குப்பைகள்

வேலூர் காகிதப்பட்டறை ஆற்காடு சாலையோரம் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் குவிந்து கிடக்கிறது. காற்று வீசும்போது அந்தக் குப்பைகள் சாலையில் சிதறுவதால் வாகனங்களில் செல்பவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையோரம் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விஷ்ணுவர்தன், வேலூர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com