

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே மின்சார ரெயிலில் பள்ளி மாணவர் மற்றும் மாணவி ஒருவர் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் காட்சி வைரலானது. இருவரும் கவரைப்பேட்டை ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் ஏறுவதுடன் தொங்கிய படி நடைமேடையில் காலை உரசிக்கொண்டு ஆபத்தான பயணம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட மாணவ-மாணவி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.
இந்த நிலையில், கல்வித்துறை அதிகாரிகளின் விசாரணையில் அவர்கள் இருவரும் கும்மிடிப்பூண்டி தாலுகாவில் உள்ள வெவ்வேறு அரசு பள்ளி மாணவ-மாணவி என்பது தெரியவந்தது. இதனையடுத்து மேற்கண்ட அரசு பள்ளிகளுக்கு சென்ற பொன்னேரி மாவட்ட கல்வித்துறை அதிகாரி புண்ணியகோடி, சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளை அவர்களது பெற்றோர் முன்னிலையில் ஆபத்து குறித்து எச்சரித்து அவர்களுக்கு உளவியல் ரீதியாக ஆலோசனை வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் மாணவ-மாணவி இருவரையும் நேரில் அழைத்து அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்.