நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழக நலன்களோடு ஒத்துப்போகிறவரை பிரதமராக தேர்ந்தெடுப்போம் டி.டி.வி.தினகரன் பேட்டி

நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று தமிழக நலன்களோடு ஒத்துப்போகிறவரை பிரதமராக தேர்ந்தெடுப்போம் என்று திருச்சியில் டி.டி.வி.தினகரன் கூறினார்.
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழக நலன்களோடு ஒத்துப்போகிறவரை பிரதமராக தேர்ந்தெடுப்போம் டி.டி.வி.தினகரன் பேட்டி
Published on

திருச்சி,

அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திருச்சியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து பேசி வருகிறார். சுற்றுப்பயணம் புறப்படுவதற்கு முன்பு நேற்று மாலை நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசு, கடந்த 4 வருடம் மக்களை கசக்கி பிழிந்துவிட்டு இப்போது தேர்தல் வந்தவுடன் வருமானவரி செலுத்துவதற்கான உச்சவரம்பு அதிகரிப்பு போன்ற அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. சில அறிவிப்புகள் நல்லதாக இருந்தாலும் தேர்தலை மனதில் வைத்து அறிவித்துள்ளதால் மத்திய அரசை நம்ப முடியவில்லை. இது தேர்தலுக்காக போடப்பட்ட பட்ஜெட் என்பது தெளிவாக தெரிகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது ஒரு தவறான நடவடிக்கை. மத்திய அரசு பல விஷயங்களை தவறாக அணுகியது தான் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம்.

திருவாரூர் இடைத்தேர்தலில் மக்களை சந்திக்க தயாராக இல்லாதவர்கள், இப்போது எப்படி நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பார்கள்?. நாடாளுமன்ற தேர்தல் குறித்து நாங்கள் சில கட்சிகளுடன் பேசி வருகிறோம். முடிவு செய்தவுடன் அது பற்றி கூறுவோம். மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பது எப்போதுமே தேவையானது. கடந்த 5 ஆண்டுகளாக மாநில அரசின் பல்வேறு விஷயங்களை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. குறிப்பாக நீட் தேர்வை கொண்டு வந்ததால் நமது கிராமப்புற மாணவ-மாணவிகள் மருத்துவ கல்வி படிக்க வேண்டும் என்ற எண்ணம் நிராசையாகி உள்ளது. ஆகையால், இந்தியா போன்ற நாட்டில் மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பது தேவையான ஒன்று.

கடந்த 50 ஆண்டுகளாக தேசிய கட்சிகளால் தமிழக நலன்கள் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்றம் கூறிய பிறகும், கர்நாடக இடைத்தேர்தலை மனதில் வைத்து கொண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தினார்கள். மேகதாது, முல்லைப்பெரியாறு என அனைத்து விவகாரத்திலும் தமிழக நலன்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதே மாநில நலனில் அக்கறை உள்ள கட்சியாக இருந்தால் யாருக்கும் விட்டு கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

ஆகவே நாடாளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகள் தான் வெற்றி பெற வேண்டும். இதனை கடந்த 2014-ம் ஆண்டே தமிழகத்தில் ஆரம்பித்து விட்டார்கள். தற்போது ஜெயலலிதா தொண்டர்களால் நடத்தப்படக்கூடிய அ.ம.மு.க. நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று தமிழக நலன்களோடு ஒத்துப்போகிறவரை பிரதமராக தேர்ந்தெடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com