வியாபாரி கொலை வழக்கு: நாமக்கல் கோர்ட்டில் வக்கீல் உள்பட 2 பேர் சரண்

குளித்தலை அருகே வியாபாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் வக்கீல் உள்பட 2 பேர் நேற்று நாமக்கல் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
வியாபாரி கொலை வழக்கு: நாமக்கல் கோர்ட்டில் வக்கீல் உள்பட 2 பேர் சரண்
Published on

நாமக்கல்,

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கம்மநல்லூரை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 70). வாழைக்காய் வியாபாரி. இவரது மகன் மணிவண்ணன் (25). இவர் அதே பகுதியை சேர்ந்த வக்கீல் பிச்சைமுத்து (44) என்பவரின் மகளை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பிச்சைமுத்து குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி பரமசிவம் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் குறித்து அவரது மகன் மணிவண்ணன் லாலாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிச்சைமுத்து, அவரது தம்பி முருகானந்தம் ஆகிய இருவரையும் தேடி வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே நேற்று வக்கீல் பிச்சைமுத்து, முருகானந்தம் (34) ஆகிய இருவரும் நாமக்கல் 2-வது குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தனர். மாஜிஸ்திரேட்டு ஜெயந்தி அவர்கள் இருவரையும் வருகிற 31-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து அவர்கள் இருவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com