சாவிலும் இணை பிரியாத தம்பதி: கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் சாவு

சுரண்டை அருகே கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்தார்.
சாவிலும் இணை பிரியாத தம்பதி: கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் சாவு
Published on

சுரண்டை,

நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள சாம்பவர்வடகரை மாஞ்சோலை தெருவை சேர்ந்தவர் அய்யங்கண்ணு நாடார் என்ற துரைசாமி (வயது 70). இவர் அப்பகுதியில் உள்ள காற்றாலையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

கடந்த 25-ந்தேதி இவர் தனது வேலையை முடித்துவிட்டு மொபட்டில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். சின்னத்தம்பி நாடாரூர் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக மொபட்டில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் காலையில் துரைசாமி உயிரிழந்தார்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், அவருடைய மனைவி களஞ்சியம் அம்மாள் (67) கணவர் இறந்த துக்கத்தில் அழுது புலம்பினார். மனம் உடைந்து காணப்பட்ட அவர் நேற்று காலை திடீரென மாரடைப்பில் இறந்தார். கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்ததை பார்த்து அப்பகுதி பொதுமக்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். சாவிலும் இணை பிரியாத அந்த தம்பதிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com