கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி திடீர் சாவு

கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி திடீரென்று இறந்தார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி திடீர் சாவு
Published on

கோவை,

கோவை சாய்பாபாகாலனி என்.எஸ்.ஆர். ரோடு 4-வது வீதியை சேர்ந்தவர் ரிஸ்வான்பாட்ஷா (வயது 44). இவர், கடந்த 1997-ம் ஆண்டு கோவையில் நடந்த ஆசிரியர் கிருஷ்ணசாமி கொலை வழக்கில் பெரியகடை வீதி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது.

இதையடுத்து அவர் கடந்த 2002-ம் ஆண்டில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிறையில் இருந்து பரோலில் ஒரு மாதம் வெளியே வந்தார். அப்போது அவர் சமீனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பரோல் முடிந்த பின்னர் அவர் மீண்டும் சிறைக்கு சென்றார்.

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவர் நேற்று காலையில் திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரை சிறைக்காவலர்கள் மீட்டு சிறைக்குள் இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து அவருடைய உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ரிஸ்வான் பாட்ஷாவின் உறவினர்கள் பலர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிரேத பரிசோதனை கூட அறைக்கு முன் திரண்டனர். சிறைக்குள் ரிஸ்வான் பாட்ஷா மயங்கி விழுந்ததும் அவரை உடனடியாக சிறைக்காவலர்கள் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லவில்லை. இதனால் தான் அவர் இறந்து விட்டார்.

மேலும் சிறையில் கைதிகள் அடிக்கடி மர்மமான முறையில் இறந்து வருகிறார்கள். இதற்கு சிறை அதிகாரிகளே காரணம். அதுபோன்று ரிஸ்வான் பாட்ஷா சாவில் மர்மம் இருக்கிறது. அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து தெரிந்த பின்னர்தான் அவருடைய உடலை வாங்கிச்செல்வோம் என்றுக்கூறி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ரேஸ்கோர்ஸ் போலீசார் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இது குறித்து போலீசார் கூறும்போது, ரிஸ்வான் பாட்ஷாவுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் இறந்துள்ளார். எனினும் அவருடைய சாவு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com