

மும்பை,
மும்பை மாநகராட்சியில் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் முதல் மேயராக பதவி வகித்து வருபவர் கிஷோரி பெட்னேக்கர். பெண் மேயரான இவர், சிவசேனா கட்சியை சேர்ந்தவர். இந்தநிலையில் கடந்த டிசம்பர் 21-ந் தேதி மர்மநபர் ஒருவர் அவரது செல்போனுக்கு அழைப்பு விடுத்து பேசியுள்ளார்.
இந்தியில் பேசிய அந்த நபர் மேயர் கிஷோரி பெட்னேக்கரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தார். பின்னர் போன் அழைப்பை துண்டித்து கொண்டார். இது பற்றி மேயர் சமீபத்தில் ஆசாத் மைதான் போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் படி போலீசார் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்து போனில் பேசிய ஆசாமியை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை மாநகராட்சி தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் மேயருக்கு கொலை மிரட்டல் விடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.