கடன் தொல்லையால் துயரம்: மனைவி, மகளை கொன்று பால் வியாபாரி தற்கொலை - மற்றொரு மகள் ஆஸ்பத்திரியில் அனுமதி

கோவையில் கடன் தொல்லையால் மனைவி, மகளை கொன்று பால் வியாபாரி தற்கொலை செய்து கொண்டார். அவரது இளைய மகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடன் தொல்லையால் துயரம்: மனைவி, மகளை கொன்று பால் வியாபாரி தற்கொலை - மற்றொரு மகள் ஆஸ்பத்திரியில் அனுமதி
Published on

கோவை,

கோவை மருதமலை அடிவாரம் அமர் ஜோதி நகரை சேர்ந்தவர் சிவமுருகன் (வயது 45) பால் வியாபாரி. இவரது மனைவி வைரராணி (40). இவர்களுடைய மகள்கள் யுவஸ்ரீ (21), ஹேமலதா (19).

சிவமுருகன் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்தார். இதற்காக பெரிய நிதிநிறுவன அதிபர்களிடம் கடன் வாங்கி, அதன் மூலம் சிலருக்கு கடன் கொடுத்து இருந்தார். ஆனால் அவரிடம் கடன் வாங்கியவர்கள் கடனைத் திருப்பிக் கொடுக்காததால் சிவமுருகன் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளானார்.

இந்தநிலையில் சிவமுருகனுக்கு கடன் கொடுத்தவர்கள் கடனைத் திருப்பி கேட்டு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் சிவமுருகன் வீட்டில் இருந்தபோது அவருக்கு கடன் கொடுத்த ஒருவர் வீட்டுக்கு வந்து கடனைத் திருப்பித் தருமாறு கேட்டுள்ளார்.

தனது மனைவி, குழந்தைகள் கண்முன்னே கடன்காரர் வந்து பணத்தை கேட்டது அவருக்கு மிகுந்த அவமானத்தை ஏற்படுத்தியது. இதனால் விரக்தியின் உச்சிக்கே சென்ற அவர் குடும்பத்துடன் தற்கொலை செய்வது என முடிவு செய்தார். தனது முடிவை மனைவியிடம் தெரிவித்தால் சம்மதிப்பாரா? என்று நினைத்து அவரிடம் சொல்லவில்லை.

பின்னர் இரவு 12 மணிக்கு, வீட்டில் இருந்த வாழைப்பழத்தில் விஷத்தை தடவி மனைவி, மகள்களுக்கு கொடுத்து விட்டு தானும் சாப்பிட்டார். பின்னர் அனைவரும் ஒரே அறையில் படுத்துவிட்டனர்.

சிறிது நேரத்திலேயே சிவமுருகன், வைரராணி, மூத்த மகள் யுவஸ்ரீ ஆகியோர் துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். இளைய மகள் ஹேமலதா, பழத்தில் கசப்பு தன்மை இருந்ததால் அதை சரியாக சாப்பிடாமல் துப்பிவிட்டார். இந்த நிலையில் அவர் நேற்று அதிகாலை, அரை மயக்கத்துடன் கண்விழித்தபோது, பக்கத்தில் படுத்திருந்த தந்தை, தாய் மற்றும் சகோதரி பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சிவமுருகன் வீட்டுக்கு விரைந்து சென்று பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர்.

அவர்கள் அரை மயக்கத்துடன் இருந்த ஹேமலதாவை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த வடவள்ளி போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த துயர சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com