சென்னையில், கடன்தொல்லையால் கை நரம்பை அறுத்து 7 வயது மகன் கொலை

சென்னை கே.கே.நகரில் கடன் தொல்லை காரணமாக கை நரம்பை அறுத்து 7 வயது மகனை கொலை செய்த தந்தை தானும் தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சென்னையில், கடன்தொல்லையால் கை நரம்பை அறுத்து 7 வயது மகன் கொலை
Published on

கோயம்பேடு,

சென்னை தேனாம்பேட்டை, ஜெயம்மாள் தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ஊர்மில் டோலியோ(வயது 47). குஜராத் மாநிலத்தை சேர்ந்த இவர், சென்னை கே.கே.நகர் பி.டி.ராஜன் சாலையில் உள்ள செல்போன் கடையில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

இவருடைய மனைவி கலைச்செல்வி. இவர்களுக்கு 2 மகன்கள். அதில் இளைய மகன் மாதவ் டோலியோ(7). நேற்று முன்தினம் இரவு ஊர்மில் டோலியோ, வழக்கத்துக்கு மாறாக கடையை முன்கூட்டியே மூடும்படி ஊழியர்களிடம் கூறினார். பின்னர் கடை சாவியை வாங்கிக்கொண்டு தனது வீட்டுக்கு சென்றார்.

பின்னர் தனது மகன் மாதவ் டோலியோவை அழைத்துக்கொண்டு மீண்டும் தனது கடைக்கு சென்றார். ஆனால் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. நீண்டநேரம் ஆகியும் கணவரும், மகனும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த கலைச்செல்வி, கணவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார்.

ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் அவர், கடை ஊழியர்களுக்கு போன் செய்து விவரத்தை கூறினார். உடனடியாக அவர்கள், செல்போன் கடைக்கு சென்றனர். கடையின் கதவு திறந்து கிடந்தது.

கடையின் உள்ளே சென்று பார்த்தபோது, ஊர்மில் டோலியோ மற்றும் அவருடைய மகன் மாதவ் டோலியோ இருவரும் ரத்தவெள்ளத்தில் கிடந்தனர். இருவரது கை நரம்புகளும் துண்டிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி வடபழனி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் சிறுவன் மாதவ் டோலியோ ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

உயிருக்கு போராடிய ஊர்மில் டோலியோவுக்கு டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுபற்றி வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ஊர்மில் டோலியோ, கடந்த சில நாட்களாக கடன் தொல்லையால் மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த அவர், நேற்று முன்தினம் விரைவாக கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் தனது 7 வயது மகனுடன் மீண்டும் கடைக்கு திரும்பி வந்தார்.

அங்கு தான் வைத்திருந்த கத்தியால் மகனின் கை மணிக்கட்டு பகுதியில் உள்ள நரம்புகளை அறுத்து கொலை செய்து விட்டு, தனது கை மணிக்கட்டு பகுதி நரம்புகளையும் அறுத்து தற்கொலைக்கு முயன்று இருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இருப்பினும் கடன் தொல்லையால் ஊர்மில் டோலியோ இந்த விபரீத முடிவை எடுத்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com