சாலையை சீரமைக்க கோரி காங்கிரசார் உண்ணாவிரதம்

குலசேகரம் அருகே சாலையை சீரமைக்க கோரி காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
சாலையை சீரமைக்க கோரி காங்கிரசார் உண்ணாவிரதம்
Published on

குலசேகரம்,

குலசேகரம் அருகே அயக்கோடு கிராம பஞ்சாயத்தில் உள்ள முக்கிய கிராம சாலைகளான பரவக்காடு சாலை, மலவிளை சாலை, அண்டூர் சாலை ஆகியவை கடந்த 10 ஆண்டுகளாக சீரமைக்காமல், பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனை சீரமைக்க கோரி போராட்டம் நடத்தியும், மாவட்ட நிர்வாகத்துக்கு பலமுறை மனு அளித்தும் பலனில்லை.

இந்தநிலையில், நேற்று காலை காங்கிரஸ் கட்சி சார்பில் சாலைகளை சீரமைக்க கோரி அண்டூரில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு அயக்கோடு கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர் வினோத்ராய் தலைமை தாங்கினார். கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ் குமார் தொடங்கி வைத்து பேசினார். இதில் காங்கிரஸ் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ராஜேஷ்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது வருகிற 9-ந் தேதி முதல் சாலைப்பணிகள் தொடங்கி நடைபெறும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். அவ்வாறு செய்யாவிட்டால், நெடுஞ்சாலை அலுவலகத்தில் எனது தலைமையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கூறினார். அதைத்தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com