

சேலம்,
நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் ஆகியவை சார்பில் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே போராட்டம் நடைபெற்றது. மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பகவத்சிங் முன்னிலை வகித்தார். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தரையில் அமர்ந்து மாதிரி சட்டசபை நடத்தினர். தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளித்து சிறப்பு தனி சட்டம் இயற்ற வேண்டும், நீட் தேர்வால் உயிரிழந்த அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.50 லட்சம் இழப்பீடு மற்றும் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களை முன்மொழிந்து நிறைவேற்றினர்.
இதுகுறித்து அவர்கள் கூறும் போது, நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க மாநில அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மாணவர்களின் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இதனை கண்டிக்கும் வகையில் மாதிரி சட்டசபை நடத்தி நீட் தேர்விற்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளோம் என்றனர்.