டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் கலெக்டர் ஆலோசனை

டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் ரோகிணி ஆலோசனை நடத்தினார்.
டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் கலெக்டர் ஆலோசனை
Published on

சேலம்,

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் ரோகிணி தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், கழிவுநீர் தேங்காத வகையில் சுகாதார பணிகள் மேற்கொள்வது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ரோகிணி பேசியதாவது:- சேலம் மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து அனைத்து துறை அரசு அலுவலர்களும் ஒருங்கிணைந்து இப்பணியில் ஈடுபட உள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனைகள், ரெயில்வே அலுவலகங்கள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் உள்ளிட்ட அனைத்து கட்டிடங்களின் மேல் மாடிகளை, மேல் தளங்களை கண்காணித்து மழைநீர் தேங்காதவாறு துறை அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.

உள்ளாட்சி பகுதிகளில் குப்பைகளை உடனுக்குடன் அகற்றி சுத்தம் செய்வதோடு பிளச்சிங் பவுடர் தெளித்து அந்த இடங்களை சுத்தப்படுத்த வேண்டும். அனைத்து பகுதிகளிலும் கொசு ஒழிப்பு பணிகள் துரிதப்படுத்துவதோடு கொசு ஒழிப்பு புகை அடிக்கும் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள் தங்களது பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு பொதுமக்களுக்கு இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும். அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு காய்ச்சல் பாதிப்புடன் வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான அனைத்து வசதிகளையும் உறுதி செய்திடவும் சிகிச்சைக்கு வருபவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்குவதில் காலதாமதம் செய்யக் கூடாது. மருத்துவர்கள் தங்களிடம் சிகிச்சைக்கு வருபவர்களுக்கு சூழ்நிலையின் முக்கியத்துவத்தினை கருத்தில் கொண்டு சிகிச்சை அளித்திட வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அருள்ஜோதி அரசன், மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பூங்கொடி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் கோபிநாத், மாவட்ட சமூகநல அலுவலர் விஜயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com