பள்ளியில் அடிப்படை வசதி இல்லாததை கண்டித்து வகுப்பை புறக்கணித்து மாணவ, மாணவிகள் போராட்டம்

வெண்ணந்தூர் அருகே அடிப்படை வசதி இல்லாததை கண்டித்து வகுப்புகளை புறக்கணித்து மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளியில் அடிப்படை வசதி இல்லாததை கண்டித்து வகுப்பை புறக்கணித்து மாணவ, மாணவிகள் போராட்டம்
Published on

வெண்ணந்தூர்,

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே அத்தனூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 320-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு மாணவ, மாணவிகளுக்கு குடிநீர்வசதி, போதிய சுகாதார வளாக வசதி உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை.

மேலும் இங்குள்ள சுகாதார வளாகம் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இப்பள்ளிக்கு அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என வலியுறுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் நேற்று மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து தங்கள் பெற்றோருடன் பள்ளி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த ராசிபுரம் தாசில்தார் சாகுல் அமீது மற்றும் வெண்ணந்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளிடமும், பெற்றோர்களிடமும் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பள்ளிக்கு அடிப்படை வசதிகள் செய்து தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதில் சமாதானம் அடைந்த மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com