பள்ளி விளையாட்டு மைதானத்தை மீட்காத வருவாய்த்துறையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து கடும் பாதிப்பு

தொடக்க பள்ளி விளையாட்டு மைதானத்தை மீட்காத வருவாய்த்துறையை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
பள்ளி விளையாட்டு மைதானத்தை மீட்காத வருவாய்த்துறையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து கடும் பாதிப்பு
Published on

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா நெடுங்கல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் பள்ளியின் பின்புறம் உள்ளது. இந்த விளையாட்டு மைதானத்தை சிலர் ஆக்கிரமித்து வீடு கட்டியதாக கூறப்படுகிறது.

விளையாட்டு மைதானத்தை மீட்கக்கோரி இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் கடந்த 10-ந் தேதி பொதட்டூர்பேட்டை திருத்தணி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு சென்ற வருவாய் ஆய்வாளர் அற்புதராஜ் பொதுமக்களிடம் உரிய நடவடிக்கை எடுத்து விளையாட்டு மைதானத்தை மீட்டு தருவதாக உறுதி அளித்தார். இதையடுத்து கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

அதன் பின்னர் வருவாய்த்துறை சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் வருவாய்த்துறையின் மெத்தனத்தை கண்டித்து நேற்று மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த சாலை மறியலில் பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டனர். தகவல் அறிந்ததும் வருவாய் அலுவலர் அற்புதராஜ் அந்த பகுதிக்கு விரைந்தார்.

பொதட்டூர்பேட்டை போலீசாரும் அந்த பகுதிக்கு விரைந்து வந்தனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் கிராம மக்கள் அவர்களின் சமரச பேச்சுக்கு ஒப்பு கொள்ளவில்லை. கடந்த வாரம் கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது என்று கேள்வி எழுப்பினர். இதற்கு அதிகாரிகள் பதில் ஏதும் கூறவில்லை.

இதையடுத்து தனி தாசில்தார் பாண்டியராஜன் அந்த பகுதிக்கு வந்து சேர்ந்தார். விளையாட்டு மைதானத்தில் கட்டப்பட்ட வீட்டை அவர் ஆய்வு செய்தார். அப்போது அந்த வீட்டுக்கு வருவாய்த்துறை சார்பில் பட்டா வழங்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து கிராம மக்களிடம் பேசிய அவர் அந்த வீட்டுக்கு வழங்கிய பட்டாவை ரத்து செய்வதாக தெரிவித்தார். வீட்டு உரிமையாளர்கள் தாங்களாக முன்வந்து வீட்டை அப்புறப்படுத்த 15 நாள் தவணை வழங்கினார்.

தவணை நாட்களுக்குள் அவர்கள் அப்புறப்படுத்த தவறினால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆக்கிரமிப்புக்கு உள்ளான பகுதி மீட்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.

இதைத்தொடர்ந்து கிராம மக்கள் மாலை 5 மணியளவில் தங்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com