

கறம்பக்குடி,
கறம்பக்குடியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் மற்றும் தினகரன் ஆதரவாளர்கள் சார்பில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கறம்பக்குடி பஸ் நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க. பதாகையை, தினகரன் ஆதரவாளர் சதக்கத்துல்லா கிழித்து விட்டதாக, அ.தி.மு.க. நகர செயலாளர் அப்துல்லா கறம்பக்குடி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து கறம்பக்குடி போலீசார் சதக்கத்துல்லாவை கைது செய்தனர். இதுகுறித்து அறிந்த தினகரன் ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு, கைது செய்யப்பட்ட சதக்கத்துல்லாவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென கோஷங்கள் எழுப்பினர். இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகைசாமி மற்றும் போலீசார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.