நடிகை பாயல் கோஷ் கற்பழிப்பு வழக்கில் இயக்குனர் அனுராக் காஷ்யப்புக்கு போலீசார் ‘சம்மன்’ இன்று விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

கற்பழிப்பு வழக்கில் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப்புக்கு மும்பை போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
நடிகை பாயல் கோஷ் கற்பழிப்பு வழக்கில் இயக்குனர் அனுராக் காஷ்யப்புக்கு போலீசார் ‘சம்மன்’ இன்று விசாரணைக்கு ஆஜராக உத்தரவு
Published on

மும்பை,

இமைக்கா நொடிகள் தமிழ் திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர், பிரபல இந்திப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப். இவர் மீது இந்தி நடிகை பாயல் கோஷ் மும்பை வெர்சோவா போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு புகார் அளித்தார். 2013-ம் ஆண்டு படவாய்ப்பு கேட்டு சென்றபோது, அவர் தன்னை கற்பழித்ததாக புகாரில் கூறியிருந்தார்.

இது தொடர்பாக நடிகை பாயல் கோஷ் வக்கீலுடன் சென்று போலீசாரை அணுகியதை தொடர்ந்து, அனுராக் காஷ்யப் மீது கடந்த மாதம் 22-ந் தேதி போலீசார் கற்பழிப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் நடிகை பாயல் கோஷ் மத்திய சமூக நீதித்துறை மந்திரி ராம்தாஸ் அத்வாலேயுடன் கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து முறையிட்டார். அப்போது அனுராக் காஷ்யப்பை கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார். இதையடுத்து மாநில உள்துறை மந்திரியுடன் பேசுவதாக கவர்னர் உறுதி அளித்திருந்தார்.

திடீர் சம்மன்

இந்தநிலையில் வழக்கில் திடீர் திருப்பமாக வெர்சோவா போலீசார் நேற்று இயக்குனர் அனுராக் காஷ்யப்புக்கு சம்மன் அனுப்பினர். அதில் அவர் இன்று (வியாழக்கிழமை) வெர்சோவா போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

போலீசார் சம்மன் அனுப்பி இருப்பதால் விசாரணைக்கு பிறகு அனுராக் காஷ்யப் கைது செய்யப்படுவாரா? என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com