ஆத்தூர் அருகே குடும்ப தகராறில் விபரீதம்: 2 குழந்தைகளுடன் பெண் தீக்குளிப்பு

ஆத்தூர் அருகே குடும்ப தகராறில் 2 குழந்தைகளுடன் பெண் தீக்குளித்தார். இதில் உடல் கருகிய 3 பேருக்கும் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆத்தூர் அருகே குடும்ப தகராறில் விபரீதம்: 2 குழந்தைகளுடன் பெண் தீக்குளிப்பு
Published on

ஆத்தூர்,

குடும்ப தகராறில் 2 குழந்தைகளுடன் பெண் தீக்குளித்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அழகாபுரம் கிராமம் ரெயில்வே ரோடு அருகே வசித்து வருபவர் கார்த்திக்(வயது 31). ரிக்வண்டியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி பூமதி(26). இவர்களுக்கு பூவரசன்(5) என்ற மகனும் நிலா(3) என்ற மகளும் உள்ளனர்.

கார்த்திக் அடிக்கடி வடமாநிலங்களுக்கு ரிக்வண்டியில் வேலைக்கு சென்று விடுவது வழக்கம். மாதம் ஒருமுறை சில நாட்கள் வீட்டிற்கு வந்து செல்வார். இந்த நிலையில் சமீபத்தில் கார்த்திக் ஊருக்கு வந்திருந்தார். கணவன்-மனைவி இருவருக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இருவருக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இருவரும் கடும் வாக்குவாதம் செய்து கொண்டதாக தெரிகிறது. கோபத்தில் கார்த்திக் தனது மனைவி பூமதியை தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் கார்த்திக் தூங்கி விட்டார்.

தன்னை கணவர் அடித்து விட்டாரே என்ற விரக்தியில் இருந்த பூமதி தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து உள்ளார். தான் மட்டும் இறந்து விட்டால் தன்னுடைய பிள்ளைகளை யார் கவனிப்பார்கள்? என்று எண்ணிய அவர் தனது மனதை கல்லாக்கி கொண்டு தூங்கி கொண்டு இருந்த பூவரசன், நிலா ஆகிய 2 குழந்தைகள் மீதும் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்தார். தன் மீதும் மண்எண்ணெயை ஊற்றி கொண்டு தீக்குளித்தார்.

இதனால் தீ 3 பேரின் உடல்களிலும் பற்றி எரிந்தது. 3 பேரும் அலறி கொண்டு அங்கும், இங்கும் ஓடினார்கள். இவர்களது அலறல் சத்தம் கேட்டு கார்த்திக்கும், அக்கம், பக்கத்தினரும் பதறி அடித்து கொண்டு ஓடி வந்தனர். தண்ணீரை ஊற்றி தீயை அணைத்த அவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர்கள் 3 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இது குறித்து ஆத்தூர் ரூரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். குடும்ப தகராறில் 2 குழந்தைகளுடன் பெண் தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com