ஆதிச்சநல்லூரில் மேலும் 7 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு

ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் மேலும் 7 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
ஆதிச்சநல்லூரில் மேலும் 7 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு
Published on

ஸ்ரீவைகுண்டம்,

பண்டைய தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூர் மற்றும் ஏரல் அருகே சிவகளை ஆகிய இடங்களில் தமிழக அரசு சார்பில், அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. தொல்லியல் துறை இயக்குனர் பாஸ்கர், ஆய்வாளர் லோகநாதன் தலைமையிலான குழுவினர் அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அங்கு ஏராளமான முதுமக்கள் தாழிகள், மண்பாண்ட பொருட்கள், இரும்பு மற்றும் வெண்கலத்தாலான பொருட்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

ஆதிச்சநல்லூர் பரும்பு பகுதியில் பாண்டியராஜா கோவில் அருகில், கால்வாய் ரோடு, ஆதிச்சநல்லூர் கிராமம் ஆகிய பகுதிகளில் பள்ளங்களை தோண்டி, தொல்லியல் துறையினர் அகழாய்வு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாண்டியராஜா கோவில் அருகில் தோண்டிய பள்ளத்தில் நேற்று 6 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் 5 முதுமக்கள் தாழிகள் அருகருகே இருந்தன. அதில் 3 முதுமக்கள் தாழிகள் சிதைந்த நிலையில் இருந்தன. முதுமக்கள் தாழிகளின் அருகில் மண்பாண்ட கிண்ணங்களும் இருந்தன.

மேலும் கால்வாய் ரோடு பகுதியில் தோண்டப்பட்ட பள்ளத்தில் மற்றொரு முதுமக்கள் தாழி இருந்தது. அங்கு இன்னொரு பள்ளத்தில் தோண்டியபோது எலும்புக்கூடு இருந்தது.

ஆதிச்சநல்லூர் கிராமம் பகுதியில் தோண்டிய பள்ளத்தில் பெரிய மண்பானை கவிழ்த்து வைக்கப்பட்டு இருந்தது. இதன்மூலம் அங்கு பழங்கால மக்களின் வாழ்விடம் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

முதுமக்கள் தாழிகளை அந்தந்த பள்ளங்களிலேயே தார்ப்பாயால் மூடி வைத்து பாதுகாத்து வருகின்றனர். உடைந்த மண்பாண்ட பொருட்களை, அருகில் உள்ள புளியங்குளம் முதுமக்கள்தாழி தகவல் மையத்தில் வைத்து பாதுகாத்து வருகின்றனர். அந்த தகவல் மையத்துக்கு இன்னும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை.

எனவே, புளியங்குளம் முதுமக்கள்தாழி தகவல் மையத்துக்கு உடனே மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com