

பழனி:
பழனி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் அகமது ரபி (வயது 56). இவர் நெய்க்காரப்பட்டி அருகே கே.வேலூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் அகமது ரபி பள்ளியில் படிக்கும் மாணவிகள் சிலருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வட்டார கல்வி அலுவலகத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் கல்வித்துறை அதிகாரிகள் விசாரித்து நேற்று முன்தினம் அவரை பணியிடை நீக்கம் செய்தனர்.
இதற்கிடையே மாணவிகளின் பெற்றோர் தரப்பில் பழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து ஆசிரியர் அகமது ரபியை நேற்று கைது செய்தனர். பின்னர் திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் அவர் ஆஜர்படுத்தப்பட்டு, பழனி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.