காவிரி நீர் பங்கீடு ஒப்பந்தத்தை தி.மு.க. அரசுதான் புதுப்பிக்க தவறியது - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

காவிரி நீர்பங்கீடு ஒப்பந்தத்தை புதுப்பிக்க தி.மு.க. அரசு தவறியதால் தான் தமிழகம் வஞ்சிக்கப்பட்டது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
காவிரி நீர் பங்கீடு ஒப்பந்தத்தை தி.மு.க. அரசுதான் புதுப்பிக்க தவறியது - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
Published on

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமையில் நடந்தது. விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு காமாட்சியம்மன் கோவிலில் தங்கத்தேர் இழுத்தார். பின்னர் நடைபெற்ற விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் அனைத்து திட்டங்களையும் இந்த ஓராண்டில் நிறைவேற்றியுள்ளார். அதனை மக்களுக்கு கொண்டுசேர்க்கும் வகையில் செய்தி தொடர்புத் துறை மூலமாக மலர் மற்றும் குறும்படங்கள் தயாரிக்கப்பட்டு முதல்-அமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஜெயலலிதா பிறந்த நாளான வருகிற 24-ந் தேதி அதனை முதல்- அமைச்சர் வெளியிடுவார்.

காவிரி நீர்பங்கீடு தொடர்பாக 1924-ல் போடப்பட்ட ஒப்பந்தத்தை 50-வது ஆண்டான 1974-ல் அன்றைய தி.மு.க. அரசு புதுப்பிக்க தவறியதன் மூலம் தமிழகம் வஞ்சிக்கப்பட்டது. 2007-ல் நடுவர்மன்ற தீர்ப்பு வந்தபோதும் 19 டி.எம்.சி. குறைக்கப்பட்டது. அப்போது தமிழகத்திலும், மத்தியிலும் தி.மு.க. ஆட்சியில் இருந்தது.

தற்போது 14 டி.எம்.சி. தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளது வருத்தப்பட வேண்டிய விஷயம் தான். இருந்தாலும் மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com