குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பொதுமக்கள் போராட்டம்

கிராமத்தின் வழியாக லாரிகள் இயக்கப்படுவதை கண்டித்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பொது மக்கள் போராட்டம் நடத்தினர்.
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பொதுமக்கள் போராட்டம்
Published on

திருமானூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள பெரியபட்டாக்காடு கிராம பகுதியில் சுண்ணாம்புக்கல் சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சுரங்கத்திலிருந்து திருச்சியில் இயங்கி வரும் தனியார் சிமெண்டு ஆலைக்கு லாரிகள் மூலம் சுண்ணாம்புக்கல் ஏற்றி செல்லப்படுகின்றன.

இந்த லாரிகள் கல்லக்குடி கிராமத்தின் வழியாக இயக்கப்பட்டது. இவ்வாறு செல்லும் லாரிகள் மூலம் பல்வேறு விபத்துகள் ஏற்படுவதாகவும், லாரிகள் செல்லும் போது ஏற்படும் புழுதியால் குடிதண்ணீர் மற்றும் உணவு பொருட்கள் வீணாவதாகவும் கூறி கிராமமக்கள் லாரிகளை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடந்த 6 மாதமாக லாரிகள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், நேற்று முன்தினம் கல்லக்குடி வழியாக போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் சுண்ணாம்புக்கல் லாரிகள் இயக்கப்பட்டதால், ஆத்திரமடைந்த பொது மக்கள் கல்லக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் அந்த பகுதியில் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த கோட்டாட்சியர் சத்திய நாரா யணன் சம்பவ இடத்திற்கு வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இதைத் தொடர்ந்து அந்த வழியாக லாரிகள் செல்வது நிறுத்தப்பட்டது. இதனால் பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com