சி.டி.யை காட்டி மிரட்டி மந்திரி பதவி பெற்றவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் தைரியம் உள்ளதா? எடியூரப்பாவுக்கு சித்தராமையா கேள்வி

சி.டி.யை காட்டி மிரட்டி மந்திரி பதவி பெற்றவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் தைரியம் எடியூரப்பாவுக்கு உள்ளதா? என்று சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா
Published on

ஞானோதயம் வந்துள்ளது

சி.டி.யை காட்டி மிரட்டி சிலர் மந்திரி பதவி பெற்றுள்ளதாக பா.ஜனதாவை சேர்ந்த பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ. கூறியுள்ளார். மிரட்டியவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் தைரியம் எடியூரப்பாவுக்கு உள்ளதா?. எடியூரப்பாவின் குடும்ப அரசியல் குறித்து பா.ஜனதா நிர்வாகிகளுக்கு தாமதமாக ஞானோதயம் வந்துள்ளது.

எடியூரப்பா பெயருக்கு தான் முதல்-மந்திரி. எல்லா பணிகளையும் அவரது மகன் விஜயேந்திரா தான் மேற்கொள்கிறார் என்று நான் நீண்ட நாட்களுக்கு முன்பே கூறினேன். சிலருக்கு இப்போது தான் தெரிய வருகிறது. எடியூரப்பாவின் பதவி உறுதியாக இருந்திருந்தால், மேலிட தலைவர்களின் கை கால்களை பிடிக்கும் நிலை அவருக்கு வந்திருக்காது.

புலம்புகிறார்கள்

சிலருக்கு மந்திரி பதவி வழங்க சட்ட ரீதியிலான தடை இருப்பது தெரிந்தும், அத்தகையவர்களை ஆசை காட்டி பா.ஜனதாவில் சேர்த்துக் கொண்டுள்ளனர். அதனால் தான் பா.ஜனதாவில் சேர்ந்த சிலர் தற்போது புலம்புகிறார்கள்.

இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com