

தேனி:
டாக்டர் வீடு
தேனி கே.ஆர்.ஆர். நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் டாக்டர் பாப்புசாமி. இவர் கடந்த ஆண்டு இறந்து விட்டார். இவருடைய மனைவி ஜெயராணி (வயது 70). இவர் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
இவருடைய மகள் அஸ்வத்தமா அமெரிக்காவில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் அமெரிக்காவில் இருந்து தேனி வந்தார். பின்னர், கடந்த 14-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு ஜெயராணி தனது மகளுடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றார். இன்று காலையில் அவர்கள் வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
16 பவுன் திருட்டு
வீட்டுக்குள் சென்று பார்த்தபோது 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு அவற்றில் இருந்த 16 பவுன் நகைகள், ஒரு ஜோடி வெள்ளிக் கொலுசு, ரூ.2 ஆயிரம் மற்றும் அமெரிக்க டாலர் 50 (இந்திய ரூபாய் மதிப்பில் 3 ஆயிரத்து 890), மலேசியன் ரிங்கிட் 200 (இந்திய ரூபாய் மதிப்பில் 3 ஆயிரத்து 538) ஆகியவை திருடு போயிருந்தன. இதுகுறித்து ஜெயராணி, தேனி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் அங்கு வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் பைரவ் அங்கு வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடி நின்றது. ஆனால் யாரையும் அது கவ்வி பிடிக்கவில்லை. இதுகுறித்து ஜெயராணி கொடுத்த புகாரின் பேரில் தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.