வரதட்சணை கொடுமையால் பரிதாபம்: கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை கொலை செய்ததாக கணவர்- குடும்பத்தினர் மீது போலீசில் புகார்

தாவணகெரே அருகே, வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அவரை கொலை செய்து விட்டதாக கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
வரதட்சணை கொடுமையால் பரிதாபம்: கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை கொலை செய்ததாக கணவர்- குடும்பத்தினர் மீது போலீசில் புகார்
Published on

தாவணகெரே,

தாவணகெரே மாவட்டம் சன்னகிரி தாலுகா ஈரோடிதாண்டா கிராமத்தை சேர்ந்தவர் தீபக். இவருக்கும் அதேப்பகுதியை சேர்ந்த ஷில்பா(வயது 22) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்து இருந்தது. திருமணத்தின் போது தீபக்கிற்கு, ஷில்பாவின் குடும்பத்தினர் நகை, பணம் வரதட்சணையாக கொடுத்து இருந்தனர். திருமணமான புதிதில் தீபக்கும், ஷில்பாவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் ஷில்பா கர்ப்பம் அடைந்தார். தற்போது அவர் 3 மாத கர்ப்பிணியாக இருந்தார். மகிழ்ச்சியாக சென்று கொண்டு இருந்த தீபக், ஷில்பாவின் வாழ்க்கையில் வரதட்சணை என்ற அரக்கனால் கடந்த சில தினங்களாக புயல்வீச தொடங்கியது. தீபக்கும், அவரது குடும்பத்தினரும் சேர்ந்து கூடுதலாக வரதட்சணை வாங்கிவரும்படி ஷில்பாவிடம் கூறி உள்ளனர். ஆனால் இதற்கு ஷில்பா மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் தீபக்கும், அவரது குடும்பத்தினரும் ஷில்பாவை அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்து காணப்பட்ட ஷில்பா தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது அறையில் ஷில்பா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த தீபக், ஷில்பாவின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தார். இதனால் பதறிபோன அவர்கள் அலறி அடித்து கொண்டு தீபக்கின் வீட்டிற்கு வந்தனர்.

அங்கு ஷில்பா தூக்கில் தொங்குவதை கண்டு கதறி அழுதனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் சன்னகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்கள். பின்னர் ஷில்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். போலீசார் நடத்திய விசாரணையில் வரதட்சணை கொடுமையால் ஷில்பா தற்கொலை செய்தது தெரியவந்தது. இதற்கிடையே ஷில்பாவின் பெற்றோர் சன்னகிரி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தனர்.

அதில் வரதட்சணை வாங்கி வரும்படி ஷில்பாவை கணவர் தீபக்கும் அவரது குடும்பத்தினரும் கொடுமைப்படுத்தி வந்தனர். ஆனால் இதற்கு ஷில்பா மறுத்ததால் அவரை அடித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடுகிறார்கள்.

இதனால் தீபக் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி இருந்தனர். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சன்னகிரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com