சேலம் மாநகராட்சிக்கு வரி செலுத்தாத 5 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு 2 கடைகளுக்கு சீல்

சேலம் மாநகராட்சிக்கு வரி செலுத்தாத 5 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சிக்கு வரி செலுத்தாத 5 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு 2 கடைகளுக்கு சீல்
Published on

சேலம்,

சேலம் மாநகராட்சி பகுதி பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மாநகராட்சிக்கு வருகிற 31-ந்தேதி வரை செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, காலிமனை வரி, கடை வாடகை, குத்தகை உரிமையாணை தொகை, பாதாள சாக்கடை திட்ட வைப்புத்தொகை, குடிநீர் கட்டண வேறுபாட்டு வைப்பு தொகை மற்றும் நிலுவை கட்டணங்களை மாநகராட்சி கணினி வரி வசூல் மையங்களில் நேரிலோ அல்லது மாநகராட்சி இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாகவோ 31-ந் தேதிக்குள் செலுத்த மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டது.

மேலும் நீண்ட நாட்களாக அதிக அளவில் வரியினங்களில் நிலுவை வைத்துள்ளவர்களை நேரில் சந்தித்து வரி வசூல் செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவினர் வாயிலாக அறிவுரை வழங்கியும், வரியினங்களை செலுத்தாத குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

துண்டிப்பு

அதன்படி சேலம் புதிய பஸ் நிலைய வளாகத்தில் நீண்ட நாட்களாக வரி செலுத்தாமல் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேல் நிலுவை வைத்திருந்த 2 கடைகளை நேற்று மாநகராட்சி அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர்.

இதேபோல், நீண்ட நாட்களாக வரி செலுத்தாத சூரமங்கலம் மண்டலம் ஜாகீர் அம்மாபாளையம் வள்ளியம்மன் தெரு, காளியம்மன் கோவில் தெரு, சூரமங்கலம் அப்பாவு நகர் என 4 குடியிருப்புகளுக்கும், அம்மாபேட்டை மண்டலம் ஆறுமுகம் நகரில் ஒரு குடியிருப்பு என 5 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தாங்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் மற்றும் நிலுவை கட்டணங்களை உரிய காலத்திற்குள் செலுத்திட வேண்டும். வரியினங்களை செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்புகளை துண்டிக்கும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com