குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்கு வரத்து பாதிக்கப் பட்டது.
குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
Published on

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம் கீழவண்ணம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களின் குடிநீர் தேவைக்காக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் கொள்ளிடம் ஆற்றில் ஆழ்குழாய் அமைக்கப்பட்டு அதன் மூலம் கீழவண்ணம் பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனே குடிநீர் வழங்க வேண்டும் என்று கூறி நேற்று கீழப்பழுவூர்- ஏலாக் குறிச்சி சாலையில் காலிக்குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கீழப்பழுவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், கடந்த 3 மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் தொலை தூரம் சென்று விவசாய கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணற்றில் இருந்து தண்ணீர் பிடித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வெளியில் வேலைக்காக செல்பவர்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் பெரிதும் அவதிப்பட்டு வருகிறோம். இது குறித்து விரைவில் நட வடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் பல்வேறு போராட்டங்கள் நடத்துவோம் என்று கூறினர். இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துரைத்து விரைவில் கீழவண்ணம் பகுதியில் குடிநீர் வினியோகம் செய்ய நட வடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் கீழப்பழுவூர்- ஏலாக் குறிச்சி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com