குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

துறையூரில் குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
Published on

துறையூர்,

துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட 1-வது மற்றும் 2-வது வார்டுகளில் 5 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் அனைவருக்கும் குடிநீர் கிடைக்க வேண்டும் என்பதற்காக நகராட்சி நிர்வாகம் அனைத்து வீடுகளிலும் குடிநீர் குழாயை மேலே உயர்த்தி அமைத்தது. இதன்காரணமாக கடந்த 3 மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். எனவே தங்கள் பகுதிக்கு உடனடியாக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி அப்பகுதி பொதுமக்கள், ஆத்தூர் சாலையில் காலிக்குடங்களுடன் நேற்று மாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மாலை நேரத்தில் போராட்டம் நடைபெற்றதால் பள்ளி-கல்லூரி பஸ்கள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. இதுபற்றி தகவல் அறிந்த துறையூர் கிராம நிர்வாக அலுவலர் போஜராஜன், நகராட்சி உதவி பொறியாளர் ஜெயமாலதி, துறையூர் இன்ஸ்பெக்டர் குருநாதன், சப்-இன்ஸ்பெக்டர் ஹாரூன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அங்கு அவர்கள், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, புதிதாக அமைக்கப்பட்ட குழாய் மூலம் உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைதொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com