

கிணத்துக்கடவு,
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள நெம்பர்-10 முத்தூர் ஊராட்சிக்குட்பட்ட சங்கராயபுரத்தை சேர்ந்தவர் நஞ்சப்ப கவுண்டர். இவரது மகன் பிரபு(வயது 35). டிரைவர். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் தனக்கு சொந்தமான சரக்கு வாகனத்தை வாடகைக்கு ஓட்டி வந்தார்.
இதற்கிடையில் மது குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையான அவர், தினமும் குடிபோதையில் வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை பெற்றோர் கண்டித்து வந்தனர். அதன்பின்னர் சில நாட்கள் மதுப்பழக்கத்தை நிறுத்தி இருந்த அவர், சம்பவத்தன்று மீண்டும் குடிபோதையில் வீட்டுக்கு வந்ததாக தெரிகிறது.
அப்போது அவரை பெற்றோர் கண்டித்தனர். பின்னர் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் பிரபு நேற்று முன்தினம் இரவில் குப்பேகாட்டுப்பாறையில் மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு அமர்ந்திருப்பதாக தனது உறவுக்கார அண்ணனுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், அங்கு உறவினர்களுடன் விரைந்து சென்று, மயங்கி கிடந்த பிரபுவை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அவர் மாற்றப்பட்டார்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பிரபு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.