ஓசூரில் குட்டையில் மூழ்கி மாணவி சாவு

ஓசூரில் குட்டையில் மூழ்கி மாணவி பரிதாபமாக உயிரிழந்தாள்.
ஓசூரில் குட்டையில் மூழ்கி மாணவி சாவு
Published on

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள தொட்லாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அனிசந்திரன். கூலித்தொழிலாளி. இவரது மகள் காவ்யா(வயது 11). இவள் தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே கோவிலூர் என்ற இடத்தில் உள்ள ஒரு விடுதியில் தங்கி 6-ம் வகுப்பு படித்து வந்தாள்.

அனிசந்திரன் கடந்த சில மாதங்களாக ஓசூர் விஸ்வநாதபுரம் பகுதியில் குடும்பத்துடன் தங்கி, கூலி வேலை செய்து வருகிறார். தற்போது பள்ளி விடுமுறையை முன்னிட்டு, காவ்யா ஓசூர் வந்து பெற்றோருடன் தங்கியிருந்தாள்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை மாணவி காவ்யா விஸ்வநாதபுரம் பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது, எதிர்பாராதவிதமாக, அருகில் உள்ள குட்டையில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி தத்தளித்தாள். அவளது அலறல் சத்தம் கேட்டு அனிசந்திரனும், அக்கம் பக்கத்தினரும் அங்கு ஓடி சென்றனர்.

பின்னர் காவ்யாவை மீட்டு, ஓசூர்-பாகலூர் சாலையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி காவ்யா பரிதாபமாக இறந்தாள். அவளது உடலை கண்டு பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர். இது குறித்து தகவல் அறிந்த ஓசூர் அட்கோ போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குட்டையில் மூழ்கி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கந்திகுப்பம் அருகே குட்டையில் மூழ்கி 2 மாணவர்களும், 2 மாணவிகளும் உயிரிழந்த நிலையில் தற்போது ஓசூரிலும் குட்டையில் மூழ்கி மாணவி உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com