போதை மாத்திரை விற்பனை: கைதான சின்னத்திரை நடிகை அனிகா தமிழகத்தை சேர்ந்தவர் போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

போதை மாத்திரை விற்பனை வழக்கில் கைதான சின்னத்திரை நடிகை அனிகா தமிழகத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்து உள்ளது. மேலும் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்களும் வெளியாகி உள்ளது.
போதை மாத்திரை விற்பனை: கைதான சின்னத்திரை நடிகை அனிகா தமிழகத்தை சேர்ந்தவர் போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்
Published on

பெங்களூரு,

பெங்களூருவில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக அனிகா, அவரது கூட்டாளிகள் ரவீந்திரன், அனூப் ஆகியோரை போதை பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்து உள்ளனர். அனிகாவிடம் நடத்திய விசாரணையில் அவர் கன்னட சின்னத்திரை நடிகை என்பது தெரியவந்தது.

மேலும் அவர் கன்னட நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளருக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கிடையே கன்னடத்தில் முன்னணி இயக்குனரான இந்திரஜித் லங்கேசும், கன்னட நடிகர்கள், நடிகைகளிடம் போதை பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் இருப்பதாக கூறினார். இதனால் இந்த விவகாரம் இப்போது விஸ்வரூபம் எடுத்து உள்ளது. கைதான அனிகாவை தங்களது காவலில் எடுத்து போதை பொருள் தடுப்பு பிரிவினர் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அனிகாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது கைதான அனிகா தமிழ்நாடு சேலம் மாவட்டம் ஏற்காட்டை சேர்ந்தவர் ஆவார். ஏற்காட்டில் உள்ள கல்லூரியில் அனிகா ஓட்டல் மேனேஜ்மெண்ட் படித்து வந்து உள்ளார். ஆனால் படிப்பை பாதியிலேயே கைவிட்ட அனிகா பின்னர் வேலை தேடி பெங்களூருவுக்கு வந்து உள்ளார். பின்னர் அவர் தனியார் தங்கும் விடுதியில் தங்கி இருந்து வேலை தேடி உள்ளார்.

ஆனால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இதற்கிடையே சென்னையில் வசித்து வந்த ரவீந்திரன், கொச்சியை சேர்ந்த அனூப் ஆகியோருடன் அனிகாவுக்கு பழக்கம் ஏற்பட்டு வந்தது. அவர்கள் ஏற்கனவே போதை மருந்துகளை விற்று வந்து உள்ளனர். மேலும் வேலை கிடைக்காமல் இருந்த அனிகாவும் போதை பொருட்களை விற்பனை செய்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்று முடிவுக்கு வந்து உள்ளார். பின்னர் போதை மருந்துகளை அனிகா விற்று வந்து உள்ளார். இதற்கிடையே கன்னட பிரபல நடிகையின் அறிமுகம் அனிகாவுக்கு கிடைத்து உள்ளது. அவர் மூலம் அனிகா சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்து உள்ளார்.

இதற்கிடையே சமூக வலைத்தளங்களில் கணக்கு தொடங்கிய அனிகா அதன்மூலம் போதை பொருட்களை விற்பனை செய்து உள்ளார். மேலும் ரவீந்திரன், அனூப்பிடம் இருந்து போதை பொருட்களை வாங்கி அவற்றை வாடிக்கையாளரின் முகவரிக்கும் பார்சல் செய்து அனுப்பி வந்து உள்ளார். இதற்கிடையே ஒரு தனியார் நிறுவனத்தில் அனிகாவுக்கு வேலை கிடைத்து உள்ளது. அந்த நிறுவனத்தில் வேலை செய்து வந்த நைஜீரிய நாட்டை சேர்ந்த ஆன்டி ஜம்போ என்பவருடன் அனிகாவுக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. பின்னர் 2 பேரும் திருமணம் செய்து உள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீசாரை தாக்கிய வழக்கில் ஆன்டி ஜம்போ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இதன்பின்னர் அனிகாவுக்கு நைஜீரியா நாட்டை சேர்ந்த சிலருடன் தொடர்பும் கிடைத்து உள்ளது. அவர்கள் மூலமும் அனிகா போதை பொருட்களை விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. பெரும்பாலும் அவர் டார்க்வெப் இணையதளம் மூலமே போதை மாத்திரைகளை ஆர்டர் செய்து வாங்கி விற்பனை செய்து உள்ளார். அனிகாவுக்கு பெங்களூருவில் போதை பொருட்கள் விற்பனை செய்யும் 18 கும்பலுடனும் தொடர்பு இருந்து உள்ளது. கன்னட திரையுலகினருக்கு போதை மாத்திரைகளை அனிகா விற்பனை செய்கிறார் என்று கூறப்பட்ட நிலையில் அவர் யாரையும் நேரில் சந்திக்காமல் வேறு நபர்கள் மூலமே அவர்களுக்கு மாத்திரைகளை வினியோகம் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கைதான நடிகை அனிகாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com