தலைமுடியை காயவைக்கும் கருவியை பயன்படுத்தியபோது மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

மயிலாடுதுறை அருகே தலைமுடியை காயவைக்கும் கருவியை பயன் படுத்தியபோது மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார்.
தலைமுடியை காயவைக்கும் கருவியை பயன்படுத்தியபோது மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
Published on

மயிலாடுதுறை,

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள சித்தர்காடு இந்திரா நகரை சேர்ந்த ஜெயபால் மகன் அந்தோணி(வயது 24). கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலை தனது வீட்டில் குளித்து விட்டு ஈரமான தலை முடியை காயவைப்பதற்காக முடிஉலர்த்தும் கருவியை(ஹேர் டிரையர்) பயன்படுத்திக்கொண்டு இருந்தார்.

அப்போது கையில் வைத்திருந்த ஹேர் டிரையரில் இருந்து அவர் மீது திடீரென்று மின்சாரம் தாக்கியது. இதில் அந்தோணி தூக்கி வீசப்பட்டு வீட்டின் சுவரில் மோதி கீழே விழுந்தார்.

பரிதாப சாவு

உடனடியாக அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், அந்தோணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதனையடுத்து அந்தோணியின் உடல் அதே அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com