குடும்பத்தகராறு காரணமாக: கைக்குழந்தையுடன் ரெயில் முன்பாய்ந்து கர்ப்பிணி தற்கொலை - வயிற்றில் இருந்த சிசுவும் தண்டவாளத்தில் விழுந்தது

குடும்பத்தகராறு காரணமாக கைக்குழந்தையுடன் ரெயில் முன்பாய்ந்து கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டார். இதில் தாயும், குழந்தையும் இறந்ததுடன், வயிற்றில் இருந்த சிசுவும் தண்டவாளத்தில் விழுந்தது. இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
குடும்பத்தகராறு காரணமாக: கைக்குழந்தையுடன் ரெயில் முன்பாய்ந்து கர்ப்பிணி தற்கொலை - வயிற்றில் இருந்த சிசுவும் தண்டவாளத்தில் விழுந்தது
Published on

கோவை,

கோவை சின்னதடாகத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகள் மகேஸ்வரி (வயது 27). இவருக்கும் சின்னியம்பாளையம் அருகே உள்ள கருப்பராயன்பாளையத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி தனபால் (32) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யுவன் (1) என்ற ஆண் குழந்தை இருந்தது. மகேஸ்வரி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டது. மேலும் தனபால் மது குடித்துவிட்டு தனது மனைவியை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கோவை புலியகுளத்தில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மகேஸ்வரி புகார் அளித்தார். போலீசார் கணவன்-மனைவி இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இதைதொடர்ந்து மகேஸ்வரியின் பெற்றோர், சின்னதடாகம் பகுதியில் வாடகைக்கு வீடு பிடித்து மகளையும், மருமகனையும் குடியமர்த்தினார்கள். போலீசில் புகார் செய்த சம்பவத்தை தொடர்ந்து தனபால், தன்னுடைய மாமனார் வீட்டுக்கு வருவதில்லை. மகேஸ்வரி மட்டும் கைக்குழந்தையுடன் அடிக்கடி வந்து சென்றார். கணவன்-மனைவி தகராறு தொடர்ந்து நீடித்தது.

இந்தநிலையில், கர்ப்பிணியான மகேஸ்வரியை தகாத வார்த்தையால் தனபால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மகேஸ்வரி மனவேதனை அடைந்தார். பிரசவத்துக்கு இன்னும் 15 நாட்களே இருந்தநிலையில், கணவனுடன் வாழ்வதை விட உயிரைவிடுவதே மேல் என்று தற்கொலை செய்யும் நோக்கத்துடன் கோவை ரத்தினபுரி பகுதிக்கு மகேஸ்வரி, தன்னுடைய கைக்குழந்தை யுவனுடன் வந்துள்ளார். ரத்தினபுரி தில்லை நகர் பகுதியில் ரெயில் தண்டவாளம் பகுதிக்கு வந்தார். அப்போது பெங்களூருவில் இருந்து எர்ணாகுளம் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் வந்துள்ளது. அப்போது ரெயில் முன் கைக்குழந்தையுடன் அவர் பாய்ந்தார். இதில் உடல் துண்டாகி மகேஸ்வரி, யுவன் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.

பிரசவம் ஆக 15 நாட்களே இருந்தநிலையில் மகேஸ்வரி ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதால், வயிற்றில் இருந்த சிசுவும் தண்டவாளத்தில் இறந்தநிலையில் விழுந்தது. அந்த சிசுவும் ஆண் குழந்தையாகும். ரத்தவெள்ளத்தில் 3 உடல்களும் கிடந்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், பரிதாபத்தையும் ஏற்படுத்தியது.

மகள் மற்றும் பேரக்குழந்தைகளின் உடல்களை பார்த்து மகேஸ்வரியின் தாய் ஜோதிமணி, தந்தை செல்வராஜ் மற்றும் குடும்பத்தினர் கதறிதுடித்தனர். மகேஸ்வரியின் தாய் ஜோதிமணி கூறும்போது, என்னுடைய மகள் தற்கொலைக்கு மருமகன் தனபால்தான் காரணம். அவர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து, ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, மகேஸ்வரியின் கணவர் தனபாலிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com