திருமண மண்டபத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி

திருமண மண்டபத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் அருகில் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
திருமண மண்டபத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி
Published on

பூந்தமல்லி,

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. திருவேற்காடு, பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் 1 மணிநேரத்துக்கும் மேலாக மழை கொட்டித்தீர்த்தது. இதன்காரணமாக திருவேற்காடு பெருமாளகரத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தின் வளாகத்தில் மழைநீர் தேங்கியது. தொடர்ந்து மழை பெய்ததால், மண்டபத்தின் சுற்றுச்சுவரின் அடிப்பகுதி திடீரென இடிந்து விழுந்தது.

இதனால் மண்டப வளாகத்தில் தேங்கி நின்ற மழைநீர் முழுவதும் அருகில் உள்ள தாழ்வான பகுதியான ராணி அண்ணாநகர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. அங்குள்ள வீடுகளை சுற்றிலும் முட்டி அளவுக்கு குளம்போல் தண்ணீர் தேங்கி நின்றது. அதில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துவிட்டது.

இதனால் வீட்டில் உள்ளவர்கள் இரவு முழுவதும் தூங்க முடியாமல் கடும் அவதிக்குள்ளானார்கள். இதுபற்றி தகவல் அறிந்துவந்த திருவேற்காடு நகராட்சி அதிகாரிகள், குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீரை மின்மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுபற்றி அண்ணாநகர் குடியிருப்பு பகுதி மக்கள் கூறும்போது, திருவேற்காடு நகராட்சி 6-வது வார்டுக்கு உட்பட்ட இந்த பகுதியில் மழை காலங்களில் வெள்ளநீர் வீடுகளை சூழ்ந்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகிறோம். தற்போது தனியார் திருமண மண்டபத்தின் சுற்றுச்சுவர் இடிந்து எங்கள் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டதால் வீட்டில் தூங்க முடியாமல் பரிதவித்தோம். நாங்கள் தாழ்வான பகுதியில் இருப்பதால் மழைநீர் கால்வாய் அமைக்கவில்லை. மழைநீர் எங்கள் பகுதிக்குள் புகாத வண்ணம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com