நீர்வரத்து குறைந்ததால் 15 நாட்களுக்கு பிறகு ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி

காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல்லில் 15 நாட்களுக்கு பிறகு பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை 16 கண் பாலம் பகுதியில் பாறைகள் தெரியதொடங்கின.
நீர்வரத்து குறைந்ததால் 15 நாட்களுக்கு பிறகு ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி
Published on

பென்னாகரம்,

கர்நாடகா, கேரள மாநிலங்களில் பெய்த கனமழையால் கர்நாடகத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. இந்த அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 2 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன்காரணமாக ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

இந்தநிலையில் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டது. இதன்காரணமாக நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து நேற்று மேலும் குறைந்து வினாடிக்கு 17 ஆயிரம் கனஅடி தண்ணீர் மட்டுமே ஒகேனக்கல்லுக்கு வந்தது. நீர்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதிக்க வேண்டும் என பரிசல் ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

இந்தநிலையில் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதுதொடர்பான அறிக்கை மாவட்ட நிர்வாகத்திற்கு அளிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் ஒகேனக்கல் ஆற்றில் பரிசல் இயக்க பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்தது. அதன்படி கோத்திக்கல் பரிசல் துறையில் இருந்து சின்னாறு வழியாக மணல் திட்டு வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது.

இதனால் 15 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து காவிரி ஆற்றில் உற்சாகத்துடன் பரிசல் சவாரி செய்தனர். காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள் என கருதி போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவை பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

கர்நாடகத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்தடைந்தது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. இதன் காரணமாக அணையின் உபரிநீர் 16 கண் பாலம் வழியாக திறந்து விடப்பட்டது. இதனால் காவிரி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

கடந்த 2 வாரங்களாக மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டது. இதனால் உபரிநீர் வெளியேறும் 16 கண்பாலத்தில் பாய்ந்தோடும் இரைச்சல் கேட்டப்படியே இருந்தது. அதே நேரத்தில் 16 கண் பாலம் அருகே உள்ள புதிய பாலத்தில் மக்கள் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்தனர்.

இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவு குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது. இதன் எதிரொலியாக நேற்று முன்தினம் இரவு அணையில் இருந்து உபரிநீர் திறப்பது அடியோடு நிறுத்தப்பட்டது. இதனால் 16 கண் பாலம் பகுதியில் உள்ள பாறைகள் வெளியே தெரிய ஆரம்பித்தன.

கடுமையான வெள்ளப்பெருக்கு காவிரியில் ஏற்பட்ட போதும் இரவு, பகல் பாராமல் கண்விழித்து பணியாற்றி வந்த வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் தங்கள் வழக்கமான பணிக்கு திரும்பி உள்ளார்கள். கடந்த 2 வாரத்தில் மட்டும் மேட்டூர் அணையில் இருந்து 110 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) உபரிநீர் வெளியேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com