நீர்வரத்து குறைந்ததால் கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு குறைப்பு

நீர்வரத்து குறைந்ததால் கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது. வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி வீதம் நீர் செல்கிறது.
நீர்வரத்து குறைந்ததால் கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு குறைப்பு
Published on

மண்டியா,

கர்நாடகத்தில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து பலத்த மழை கொட்டி வந்தது. குறிப்பாக கர்நாடக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, கார்வார் மற்றும் மலைநாடு என அழைக்கப்படும் சிக்கமகளூரு, குடகு, சிவமொக்கா ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதன்காரணமாக கர்நாடகத்தில் உள்ள முக்கிய அணைகள் நிரம்பின.

முக்கியமாக குடகு மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் கொட்டி தீர்த்த கன மழையால் மண்டியாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணையும், மைசூருவில் உள்ள கபினி அணையும் கடந்த 2 மாதங் களில் 2 முறை முழு கொள்ளளவையும் எட்டி நிரம்பின. இதனால் இந்த அணைகளில் இருந்து வினாடிக்கு 2 லட்சம் கனஅடிக்கும் அதிகமான தண்ணீர் திறக்கப்பட்டது. இதன்காரணமாக காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த தண்ணீர் தமிழ்நாடு ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை சென்றடைந்தது.

தற்போது இரு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை குறைந்துள்ளதால், அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவும் குறைந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை நிலவரப்படி 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் 124.20 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 10,162 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 11,907 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் காலை நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 26,590 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. அணைக்கு நீர்வரத்து குறைந்ததால், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.

இதேபோல, கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையில் 2,282.77 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 7,021 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 6,250 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கேரள மாநிலம் வயநாட்டில் தற்போது மழை பெய்யாததால், கபினி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. இதனால் அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறக்கப்படுகிறது.

இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 18,157 கனஅடி வீதம் தண்ணீர் தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரு அணைகளில் இருந்து வினாடிக்கு 36 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஆனால் தற்போது அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளதால், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com