

திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த ஊத்துக்கோட்டை அருகே உள்ள தண்டலம் போஸ்ட் தொளவேடு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 50). இவர் வெங்கல் போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு லீலாவதி (49) என்ற மனைவியும், லாவண்யா என்ற மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் ஏட்டு கோவிந்தசாமி நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் பணியில் பறக்கும் படைக் குழுவில் பணிபுரிந்து வந்தார். அப்போது கடந்த ஏப்ரல் மாதம் 10-ந் தேதியன்று அதிகாலை அவர் சென்ற வாகனம் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கோவிந்தசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து அப்போதைய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி பலியான கோவிந்தசாமியின் குடும்பத்தாருக்கு இழப்பீடு பெற்றுத் தரும் முயற்சிகள் மேற்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து நேற்று திருவள்ளூரில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் உயிரிழந்த போலீஸ் ஏட்டு கோவிந்தசாமியின் மனைவி லீலாவதி மற்றும் மகள் லாவண்யா ஆகியோரை நேரில் அழைத்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் அவர்களிடம் ரூ.30 லட்சத்திற்கான காசோலையை இழப்பீடாக வழங்கினார்.