வாகன சோதனையின்போது காரில் அரிவாளுடன் தப்பிச்செல்ல முயன்ற பிரபல ரவுடி கைது

போலீஸ் வாகன சோதனையின்போது காரில் அரிவாள்களுடன் தப்பிச்செல்ல முயன்ற பிரபல ரவுடியை போலீசார் விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
வாகன சோதனையின்போது காரில் அரிவாளுடன் தப்பிச்செல்ல முயன்ற பிரபல ரவுடி கைது
Published on

பெரம்பூர்,

சென்னை பெரம்பூர், செம்பியம், திரு.வி.க. நகர் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி சங்கிலி பறிப்பு, வீடுகளின் பூட்டை உடைத்து திருடும் சம்பவங்கள் நடைபெற்று வருவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் சாய்சரண்தேஜஸ்வி உத்தரவின் பேரில் செம்பியம் போலீஸ் உதவி கமிஷனர் ஹரிக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார் பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரை நிறுத்தும்படி சைகை காண்பித்தனர். ஆனால் அந்த கார், நிற்காமல் வேகமாக சென்றது.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த காரை விரட்டிச்சென்று மடக்கி பிடித்தனர். காரின் உள்ளே சோதனை செய்தபோது அதில் 2 அரிவாள்கள் இருந்தது. காரை ஓட்டி வந்தவரை செம்பியம் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர்.

அதில் அவர், சென்னை தாம்பரம் கிஷ்கிந்தா நகர் அண்ணாதெருவைச் சேர்ந்த பிரபல ரவுடி ராமச்சந்திரன் என்ற ராம்கி (வயது 29) என்பதும், இவர் மீது பெரவள்ளூர், அம்பத்தூர், ஆவடி, எம்.கே.பி.நகர் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வீடுகளின் பூட்டை உடைத்து திருடுவது, வழிப்பறி, வாகன திருட்டு என பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிந்தது.

இந்த வழக்குகளில் 5 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் என்பதும், தற்போது அவர் ஓட்டி வந்த காரை சென்னையில் ஒரு வீட்டில் இருந்து திருடி வந்ததும் விசாரணையில் தெரிந்தது.

இதையடுத்து ராமச்சந்திரனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 30 பவுன் நகைகள், ஒரு செல்போன், 2 அரிவாள்கள் மற்றும் ஒரு கார் ஆகியவற்றை கைப்பற்றினார்கள். கைதான ராமச்சந்திரனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com