மார்த்தாண்டத்தில் துவரங்குறிச்சி என்ஜினீயர் ஆற்றில் மூழ்கி பலி - துணி வியாபாரத்துக்கு வந்தபோது பரிதாபம்

மார்த்தாண்டத்தில் ஆற்றில் குளித்த என்ஜினீயர் தண்ணீரில் மூழ்கி இறந்தார். திருச்சியில் இருந்து துணி வியாபாரத்துக்காக வந்தபோது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.
மார்த்தாண்டத்தில் துவரங்குறிச்சி என்ஜினீயர் ஆற்றில் மூழ்கி பலி - துணி வியாபாரத்துக்கு வந்தபோது பரிதாபம்
Published on

குழித்துறை,

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் அனூர் பாட்ஷா, தொழிலாளி. இவருக்கு சேக் அப்துல் காதிர் (வயது 22), சேக் அபுதாலிக் (18) உள்பட 3 மகன்கள் உள்ளனர். மூத்தமகன் சேக் அப்துல் காதிர் என்ஜினீயரிங் முடித்துள்ளார். இவருக்கு படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை.

கிறிஸ்துமஸ் சீசனையொட்டி குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் ஏராளமான வெளியூர் வியாபாரிகள் சாலையோரம் தற்காலிக கடைகள் அமைத்து துணி விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். குடும்ப வறுமை காரணமாக சேக் அப்துல் காதிரும், அவரது தம்பி சேக் அபுதாலிக்கும் ஒரு வியாபாரியிடம் கூலிக்கு துணி விற்பனை செய்வதற்காக மார்த்தாண்டத்துக்கு வந்தனர். கடந்த சில தினங்களாக மார்த்தாண்டம் பகுதியில் தங்கியிருந்து வியாபாரத்தை கவனித்தனர்.

இந்தநிலையில், நேற்று சேக் அப்துல் காதிரும், அவரது தம்பி மற்றும் நண்பர்கள் உள்பட 6 பேர் மார்த்தாண்டம் வடக்குத்தெரு, நேசமணி பாலம் பகுதியில் ஆற்றில் குளிக்க சென்றனர். அவர்கள் ஆற்றின் ஒரு கரையில் இருந்து மறுகரைக்கு நீச்சலடித்து குளித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சேக் அப்துல் காதிர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த சக நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கும், குழித்துறை தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தண்ணீரில் இறங்கி வாலிபரின் பிணத்தை மீட்டனர்.

தொடர்ந்து பிணத்தை மார்த்தாண்டம் போலீசார் கைப்பற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com