திருக்கனூர் பகுதியில் தொடர் மழை எதிரொலி: 1,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின; விவசாயிகள் வேதனை

திருக்கனூர் பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக 1,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
தொடர் மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளதை படத்தில் காணலாம்.
தொடர் மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளதை படத்தில் காணலாம்.
Published on

தொடர் மழை

திருக்கனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான செட்டிப்பட்டு, கூனிச்சம்பட்டு, சந்தை புதுகுப்பம், லிங்கா ரெட்டிபாளையம், சோரப்பட்டு, விநாயகம்பட்டு, செல்லிப்பட்டு, வாதானூர், மண்ணாடிப்பட்டு,

காட்டேரிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வெள்ளைப்பொன்னி, பொன்மணி உள்ளிட்ட நெல் ரகங்கள் நடவு செய்யப்பட்டுள்ளது.

நெற்பயிர்கள் நன்கு விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. சுமார் 1,000 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன.

விவசாயிகள் வேதனை

இதுதவிர சங்கராபரணி ஆற்றங்கரையோரம் மற்றும் ஏரிக்கரை ஓரங்களில் நடவு செய்யப்பட்டிருந்த நெற்பயிர்களும் தண்ணீர் மூழ்கி நாசமடைந்தன. வயல்களில் தண்ணீர் வடிய ஒரு வாரத்துக்கு மேல் ஆகும் என்பதால் நெற்பயிரை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இதுமட்டுமின்றி சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்த உளுந்து, காராமணி பயிர்களும் நீரில் மூழ்கின. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com