

திருக்காட்டுப்பள்ளி,
பட்டுக்கோட்டை சி.வி. சேகர் எம்.எல்.ஏ. இல்ல திருமண வரவேற்பு விழா ஆலத்தூரில் நேற்று நடைபெற்றது. விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு நேற்று வந்தார். அங்கிருந்து அவர், கார் மூலம் ஆலத்தூருக்கு புறப்பட்டார். தஞ்சை- திருச்சி மாவட்ட எல்லையான பூதலூர் அருகே உள்ள புதுக்குடியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் பேண்டுவாத்தியம் முழங்க சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
பின்னர் தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை முதல்-அமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ரெத்தினசாமி, எம்.ஜி.எம்.சுப்பிரமணியன், ராம.ராமநாதன், நிக்கல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் அறிவுடைநம்பி, துணைத் தலைவர் புண்ணியமூர்த்தி, இயக்குனர் சரவணன், பகுதி செயலாளர் ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் துரை.வீரணன், சாமிவேல், முன்னாள் பேரூராட்சி தலைவர் சிங்.ஜெகதீசன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் ஜெயபிரகாஷ் நாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.
புதுக்குடி பகுதியை சேர்ந்த நரிக்குறவர்கள் சிலர், முதல்-அமைச்சருக்கு பாசி மாலை அணிவித்து ஆரவாரம் செய்தனர். அனைவருடைய வரவேற்பை ஏற்று கொண்ட எடப்பாடி பழனிசாமி, காரில் புறப்பட்டு ஆலத்தூருக்கு சென்றார். வழியில் ஊரணிபுரத்தில் முதல்- அமைச்சருக்கு அ.தி.மு.க. வினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதில் ஆர்.வைத்திலிங்கம் எம்.பி, மாவட்ட மாணவரணி செயலாளர் ஆர்.காந்தி, திருவோணம் ஒன்றிய செயலாளர் ஆர்.சத்தியமூர்த்தி, ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய செயலாளர் கோவி.தனபால், வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.ரவிச்சந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு எடப்பாடி பழனிசாமிக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர். இதை ஏற்றுக் கொண்ட அவர், ஊரணிபுரத்தில் உள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.