இணைய தளத்தில் பதிவு செய்துள்ள கல்வி நிலையங்கள் தேசிய கல்வி உதவித் தொகை திட்டத்தில் பயன்பெறலாம், கலெக்டர் நடராஜன் தகவல்

இணையதளத்தில் பதிவு செய்துள்ள கல்வி நிலையங்கள் மட்டுமே தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
இணைய தளத்தில் பதிவு செய்துள்ள கல்வி நிலையங்கள் தேசிய கல்வி உதவித் தொகை திட்டத்தில் பயன்பெறலாம், கலெக்டர் நடராஜன் தகவல்
Published on

ராமநாதபுரம்,

தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 1 முதல் 12-ம் வகுப்பு, வாழ்க்கை தொழிற்கல்வி, ஐ.டி.ஐ., ஐ.டி.சி., பாலிடெக்னிக், பட்டயப்படிப்புகள், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள், பொறியியல் மற்றும் மருத்துவம், எம்.பில், ஆராய்ச்சி படிப்பு ஆகியவற்றை படிக்கும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், புத்த மதத்தினர், சிக்கீயர், ஜைன் மற்றும் பார்சி மதத்தைச் சார்ந்த சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கு பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் தேசிய கல்வி உதவித்தொகை இணையம் www.sch-o-l-a-rs-h-ips.gov.in வாயிலாக மத்திய அரசின் மூலம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற அனைத்து கல்வி நிலையங்களும் மேற்காணும் இணையதளத்தில் பதிவு செய்திருப்பது அவசியமாகும். எனவே, இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களும் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் பதிவு செய்துள்ளதையும், பயனீட்டாளர் குறியீடு பெறப்பட்டுள்ளதையும் உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. உரிய எண் மற்றும் கல்வி நிலையத்தின் பெயர் ஒன்றுக்கொன்று முரணாக இருப்பின் அந்த விவரத்தினை உரிய ஆவணங்களுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகி தெரிவிக்க வேண்டும்.

எண் பெறாத கல்வி நிலையங்கள் மத்திய அரசின் www.ais-he.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் பதிவு செய்து பெறலாம். பள்ளிகளை பொறுத்தவரை உரிய எண்ணிற்கு முதன்மை கல்வி அலுவலரை அணுகுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இணையதளத்தில் கல்வி நிலையத்தினை பதிவு செய்வது தொடர்பாக கல்வி நிலைய முதல்வர், தலைமையாசிரியர், டீன் கோரிக்கை கடிதம் , தலைமையாசிரியர், முதல்வர், டீன் பெயர், மொபைல் எண், கல்வி நிலையத்தின் முழு முகவரி, மற்றும் வேறு இதர விவரங்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலரை உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும்.

கல்வி நிலையங்களை தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் பதிவு செய்வதற்கு வருகிற 31-ந்தேதி கடைசி நாளாகும். இணைய தளத்தில் பதிவு செய்துள்ள கல்வி நிலையங்கள் மட்டுமே 2018-19-ம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் பயன்பெற இயலும். மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com