

கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகே உள்ள வரட்டனப்பள்ளியைச் சேர்ந்தவர் கோபால் (வயது 70). இவர் அரசு வழங்கும் முதியோர் உதவித்தொகையை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக அவரது முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் அவர் பல முறை மனு கொடுத்தும் மீண்டும் உதவித்தொகை வழங்கப்படவில்லை.
இதனால் மனமுடைந்த அவர் நேற்று காலை கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திற்கு கோரிக்கை மனுவுடன் வந்தார். அப்போது திடீரென்று தான் கொண்டு வந்த மண்எண்ணெய் பாட்டிலை எடுத்து உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதைப் பார்த்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் முதியவர் கோபாலை தடுத்து நிறுத்தி அவரிடம் இருந்த பாட்டிலை பறித்தனர். பின்னர் அவரை விசாரணைக்காக தாலுகா போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதன் காரணமாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.