மின் கசிவால் தீ விபத்து: புகை மூட்டத்தில் மூச்சு திணறி தாய், மகன் சாவு

மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டு புகை மூட்டத்தில் மூச்சு திணறி தாய், மகன் பரிதாபமாக இறந்தனர்.
மின் கசிவால் தீ விபத்து: புகை மூட்டத்தில் மூச்சு திணறி தாய், மகன் சாவு
Published on

தாம்பரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஆதனூர் துலுக்கானத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நிஷா ஏஞ்சல் (வயது 30). இவர் தனது கணவரை பிரிந்து தனது மகன் டென்னியுடன் (5) வசித்து வந்தார். நேற்று மதியம் சிமெண்டு ஓடு போட்ட வீட்டில் உள்தாழ்பாள் போட்டபடி நிஷா ஏஞ்சல் தனது மகனுடன் இரும்பு கட்டிலில் தூங்கி கொண்டிருந்தார்.

அப்போது வீட்டுக்குள் இருந்து அதிக அளவில் புகை வருவதை பார்த்த பக்கத்து வீட்டில் இருந்த உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது வீட்டில் மின்கசிவு ஏற்பட்டு இரும்பு கட்டிலில் இருந்த மெத்தை தீப்பிடித்து எரிந்ததால் புகை மூட்டத்தில் மூச்சுதிணறி நிஷா ஏஞ்சல் மற்றும் அவரது மகன் டென்னி இருவரும் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்துவந்த கூடுவாஞ்சேரி போலீசார் பலியான தாய்-மகன் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்மையிலே மின்கசிவு ஏற்பட்டு அதில் மூச்சுத்திணறி இருவரும் இறந்து போனார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com