கல்லாங்குத்து மலைவாழ் மக்களுக்கு மின்சார வசதி

15 ஆண்டுகளுக்கு பிறகு கல்லாங்குத்து மலைவாழ் மக்களுக்கு மின்சார வசதி ஏற்படுத்தி கொடுக்க, புதிதாக மின் மாற்றி அமைக்கப்பட்டது.
கல்லாங்குத்து மலைவாழ் மக்களுக்கு மின்சார வசதி
Published on

பொள்ளாச்சி

15 ஆண்டுகளுக்கு பிறகு கல்லாங்குத்து மலைவாழ் மக்களுக்கு மின்சார வசதி ஏற்படுத்தி கொடுக்க, புதிதாக மின் மாற்றி அமைக்கப்பட்டது.

15 ஆண்டுகள் கோரிக்கை

பொள்ளாச்சி அருகே ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்டது கல்லாங்குத்து. இந்த பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. இதையடுத்து குடிசை அமைத்து குடியிருந்து வருகின்றனர்.

இதற்கிடையில் தற்போது 113 கான்கிரீட் வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதை தவிர சிலர் குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு மின்சார வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று 15 ஆண்டுகளாக மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

மின்மாற்றி அமைக்கப்பட்டது

இந்த நிலையில் தற்போது மலைவாழ் மக்களின் கோரிக்கையை ஏற்று மின்வசதி ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக புதிதாக மின்மாற்றி அமைக்கும் பணி நிறைவடைந்து உள்ளது.

மலைவாழ் மக்களின் 15 ஆண்டு கால கனவு நிறைவேறியதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதற்கிடையே புதிதாக அமைக்கப்பட்ட மின் மாற்றி திறப்பு விழா நடைபெற்றது.

கொரோனா பரவல் காரணமாக நிகழ்ச்சிக்கு யாரும் அழைக்கப்படவில்லை.

மின்இணைப்பு

மின்வாரிய உதவி பொறியாளர் முத்துக்குமார், வாகை சேவை அறக்கட்டளை ரவிச்சந்திரன் மற்றும் மலைவாழ் மக்கள், மின்வாரிய ஊழியர்கள் மட்டும் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரிகள் கூறும்போது, கல்லாங்குத்து பகுதியில் புதிதாக 63 கிலோவாட் திறன் கொண்ட மின் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் இந்த பகுதியில் மின் விளக்கு வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மலைவாழ் மக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, வீட்டு இணைப்பு களும் உடனடியாக கொடுக்கப்படும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com