காவேரிப்பட்டணம் அருகே, மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் சாவு - மேலும் 5 பேர் படுகாயம்

காவேரிப்பட்டணம் அருகே மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் பரிதாபமாக இறந்தார். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
காவேரிப்பட்டணம் அருகே, மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் சாவு - மேலும் 5 பேர் படுகாயம்
Published on

காவேரிப்பட்டணம்,

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள துடுகனஅள்ளியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் வில்லாளி (வயது 27). இவர் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது. ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல வில்லாளி வேலைக்கு சென்றார். அவர் காலை 10 மணி அளவில் தேர்பட்டி பைபாசில் புதிய மின் கம்பங்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அவருடன் மேலும் 10 தொழிலாளர்களும் பணியில் இருந்தனர். கடந்த சில நாட்களாக பெய்த மழையால் மின்கம்பங்கள் அனைத்தும் ஈரமாக இருந்தது.

புதிய மின் கம்பத்தை தூக்கி நிறுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது மேலே சென்ற மின்சார வயர் மீது மின்கம்பம் உரசியது. இதில் வில்லாளி உள்பட 6 தொழிலாளர்களை மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது. அதில் வில்லாளி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் படுகாயம் அடைந்த 5 பேரையும் மீட்டு காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அதில் சுதந்திராஜ் என்பவர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவேரிப்பட்டணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

இதற்கிடையே வில்லாளியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சமாதானம் அடைந்த உறவினர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com