பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சிவகாசி தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் போராட்டம்

பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சிவகாசி தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.
பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சிவகாசி தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் போராட்டம்
Published on

சிவகாசி,

சிவகாசி அருகே உள்ளது வெள்ளூர் ஊராட்சி. இந்த பகுதியில் கடந்த 1998-ம் ஆண்டு இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின்கீழ் 40 குடும்பங்களுக்கு அரசு சார்பில் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன. இந்த வீடுகளுக்கு செல்ல ஒரு பாதையும் அமைத்து கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த பாதையை அப்பகுதி மக்கள் பயன்படுத்தாமல் வேறு ஒரு பகுதியை பாதையாக பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில் பொதுமக்கள் பாதையாக பயன்படுத்தி வந்த பகுதியை அதன் உரிமையாளர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வேலி அமைத்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை ஏதும் எடுக்காத நிலையில் நேற்று காலை சிவகாசி தாலுகா அலுவலகத்துக்கு வந்த வெள்ளூர் பஞ்சாயத்து மக்கள் தங்களுக்கு பாதையை மீட்டு தரக்கோரி முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். இதனால் தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-

பிரச்சினையை தீர்த்து வைக்க கோரி தாலுகா அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது நாங்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகிறோம். ஆனால் எந்த அதிகாரியும் எங்களை வந்து சந்தித்து எங்களின் பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை. எனவே ஊர் பொதுப்பாதையை ஆக்கிரமித்து உள்ளவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்களுக்கு பாதையை அதிகாரிகள் மீட்டு தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com