எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம்: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை சபாநாயகர் மீறி விட்டார் மூத்த வக்கீல் பி.வி.ஆச்சார்யா பேட்டி

எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை சபாநாயகர் மீறி விட்டார் என்று மூத்த வக்கீல் பி.வி.ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.
எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம்: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை சபாநாயகர் மீறி விட்டார் மூத்த வக்கீல் பி.வி.ஆச்சார்யா பேட்டி
Published on

பெங்களூரு,

காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்களை நேற்று தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவு பிறப்பித்தார். ஏற்கனவே எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யாமல் இருந்த ஆர்.சங்கர் உள்பட 3 பேரை கடந்த 25-ந் தேதி சபாநாயகர் தகுதி நீக்கம் செய்திருந்தார்.

எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தது குறித்து கர்நாடக அரசின் முன்னாள் அட்வகேட் ஜெனரலும், மூத்த வக்கீலுமான பி.வி.ஆச்சார்யா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது;-

சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்துள்ள 17 பேரில், 15 பேர் தங்களது ராஜினாமாவை அங்கீகரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அவர்களது ராஜினாமா குறித்து முடிவு எடுக்கும் அதிகாரத்தை சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட்டு வழங்கி இருந்தது. அதாவது எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை அங்கீகரிப்பதா?, வேண்டாமா? என்பது பற்றி மட்டுமே சபாநாயகர் முடிவு எடுத்திருக்க வேண்டும். எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்திருப்பது சட்டவிரோதமானது. இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை சபாநாயகர் மீறி விட்டார்.

எம்.எல்.ஏ.க்கள் விளக்கம் அளிக்கவும் சபாநாயகர் போதிய காலஅவகாசம் வழங்கவில்லை. 3 நாட்கள் மட்டுமே காலஅவகாசம் வழங்கிவிட்டு, அவர்களை தகுதி நீக்கம் செய்திருப்பது சரியல்ல. சபாநாயகரின் தீர்ப்பை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளவர்கள் சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்லலாம். ஏற்கனவே அவர்களது ராஜினாமா தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இருப்பதால், சபாநாயகரின் உத்தரவுக்கு தடை விதிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு பி.வி.ஆச்சார்யா கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com